IX. சிவந்த மண்
முட்டத்தின் அழகியலில் அதன்
செம்மண்காடுகளும் அடக்கம். இரத்தச் சிவப்பில் மண்மேடுகள். அகளிபோல
பள்ளங்கள். மழை நாட்களில் இங்கு ஓடும் வெள்ளம் கடலை சிவப்பாக்கும்.
இவை வெறும் விலங்குகள் வாழும்
காடுகளாகத்தான் இருந்தன. 60களின் இறுதியில் இங்கு மனை பிரித்து ஒரு
ஊர் உருவாக்கப்பட்டது. பெயர் 'சிவந்த மண்'.
நான் பிறந்த்து வளர்ந்தது இங்குதான்.
அப்போது அறுபதுக்கும் குறைந்த வீடுகளே இருந்தன. எல்லா வீடுகளுக்கும்
15 செண்ட் நிலம். பெரிய வீடு போக மீதி இடத்தில் எல்லோரும் எதாவது
மரங்கள் நட்டு வளர்த்தார்கள்.
எங்கள் வீட்டின் முன் மாமரங்கள் இரண்டு,
கொய்யா மரம் இரண்டு, முருங்கை மரம் ஒன்று, பெரிய வேப்பமரம் ஒன்று,
இலவம்பஞ்சு மரம் ஒன்று, பப்பாளி மரங்கள், மாதுளை மரம், தென்னை மரங்கள்
என்று ஒரு பெரும் தோட்டமே இருந்த்து.
இந்த தோட்டதின் நடுவில் வாழ்வதன் இன்பம்
சொல்லத்தேவையில்லை. இதைத்தான் 'வீடு பேறு' என்கிறர்கள் போல.
இந்தக் காடுகளில் அப்போது குள்ள நரிகள்
வாழ்ந்து வந்தன. சிலேடையகச் சொல்லவில்லை. உண்மையான, இரவில்
ஊளையிடுகின்ற காட்டு நரிகள் இங்கே இருந்தன. எத்தனையோ காலைகளில் இந்த
நரிமுகங்களில் விழித்திருக்கிறேன்.
முயல்களும், பாம்புகளும் ஏராளம்.
கள்ளிச்செடிகளும், முட்புதர்களும், காட்டுச்செடிகளும் என இந்த
நிலப்பரப்பு பயமூட்டக்கூடியதாகவும், அதே நேரம்
வியப்பூட்டக்கூடியதாகவுமிருந்த்தது.
சிவந்தமண்வாசிகளை உலகில் எங்கு
சென்றாலும் அடையாளம் சொல்லலாம், காலில் செம்மண் நிறம் எப்போதும்
ஒட்டியிருக்கும். இதைக் கழுவக்கூட தண்ணி தட்டுப்பாடு.
ஊரில் ஒரு அடிபம்பு கூடக்கிடையாது.
இரண்டு கிணறுகளில் இருக்கும் தண்ணீர் மொத்த 60வீடுகளுக்கும். சில
சிறிய குளங்கள், அவற்றில் சேரும் செம்மண் நிற நீர்தான் செடிகளுக்கு.
சிலநேரம் இந்த செம்மண் நீரில் குளித்து களிமண் மீசை
ஒட்டிக்கொள்வதுமுண்டு. அரசாங்க நீர் ஊருக்கு வர சில வருடங்கள் ஆயிற்று.
ஒரு புதிய ஊர் உருவாகியிர்ப்பதை அரசாங்கம் கடைசியாகத்தான் தெரிந்து
கொள்கிறது போல.
மழைபெய்யும் நாட்களில் சில இடங்களில்
பெரிதாகத் தோண்டிப்போட்டால் மிகவும் சுத்தமான நீர் ஊறிக்கிடக்கும்.
இந்த மண்மணக்கும் நீரில் குளியல் மணக்கும். குளித்துவிட்டு
வீடுசேருமுன் கால்கள் மீண்டும் அழுக்காகியிருக்கும்.
ஊருக்கு போக வர மேடு பள்ளமான பாதைகள்.
மழை பெய்யும் நேரங்களில், பள்ளங்களின் சுவர்களில் படிவெட்டப்பட்டு
இந்த பாதைகள் உருவாக்கப்பட்டிருந்த்தன.
ஒரு பத்து கிலோ அரிசியை வாங்கி கொண்டு
வந்து ஊர் சேர்ப்பது மிகக் கடினமான வேலை.
சைக்கிள்தான் பெரியவர்களின் ஆஸ்த்தான
வாகனம். அந்த சைக்கிளைக் கூட இரண்டுகிலோமீட்டர் உருட்டிக்கொண்டு
சென்றபின் தான் ஏறிப்போகமுடியும்.
இந்தக் காடுகளில் முந்திரி நன்றாக
விளைந்தது. முந்திரிப் பழத்தை சுவைப்பது சுவாரஸ்யம். இதில் பல வகைகள்.
சில பழங்களை உப்பு சேர்த்து சாப்பிட்டால் நல்லது, சில பழங்கள்
அப்படியே சாப்பிடலாம். இவற்றைப் பிழிந்து சின்ன பாட்டில்களில் சாறை
சேகரித்து, இரண்டு நாட்கள் களித்து குடித்தால் கள்போல சுவைக்கும்.
இவற்றை குடித்துவிட்டு வசந்த மாளிகை சிவாஜிபோல தள்ளாடி நடிப்போம்.
முந்திரிக் காடுகளில் முந்திரிக்கொட்டை
திருடுவதும் தோட்டக்காரர் துரத்துவதும் ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது.
திருடிய கொட்டைகளை விற்று வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஒட்டுவோம்.
தென்னை மரங்கள் நன்றாகக் வளர்ந்தனவே
தவிர காய்க்கவில்லை. சவுக்கு மரங்களும் நன்றாக வளர்ந்தன.
சிவந்தமண்ணை அடுத்த பகுதிகளிலும் பல
படக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
இரவில் வெளிச்சமென்று நிலவு மட்டும்தான்
இருந்தது. மின்மினிப்பூச்சிகள் ஏராளமிருந்தன சிவந்தமண்ணில். போர்வையை
கூடாரம்போல் போர்த்திக்கொண்டு அதற்குள் மின்மினிப்பூச்சிகளை
பறக்கவிடுவோம். அவை போர்வைக்குள் நட்சத்திரமாய் மின்னின.
சிவந்தமண்ணில் நீண்ட நாட்களுக்கு ரேடியோ
இருக்கவில்லை, செய்தித்தாள்கள் வரவில்லை, டி.வி எல்லாம் கனவாகத்தான்
இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பக்கத்து ஊருக்குத்தான்
செல்லவேண்டும். ஒரு கடை கூட இருக்கவில்லை. இருந்தாலும் அந்த வாழ்க்கை
திகட்ட திகட்ட இனித்தது.
கிராமங்களில் மாதம் இரண்டாயிரம்
சம்பாதிக்கும் ஒருவரின் சந்தோஷத்திற்கும் பட்டினத்தில் இருபதாயிரம்
வாங்குபவரின் சந்தோஷத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?
உண்மையில், கிராமத்து வாழ்க்கையில் இருக்கும் உயிரோட்டம்
வேறெங்குமில்லை.
எங்கெல்லாமோ அலைந்துவிட்டு
கூட்டுக்குத்திரும்பும் பறவைகள் போன்ற அந்த வாழ்க்கைக்கு, வெறும் டி.
வி பார்த்தே பொழுதுபோக்கும் இன்றைய வாழ்க்கை ஈடாகவில்லை,
ஆயிரமிருந்தும்... வசதிகளிருந்தும்.